ராவணன்- விமர்சனம்

இரண்டேகால் மணித்தியாலங்களுக்குள் வேற்று உலகில் சஞ்சரிக்க ஆசையா? முதல்ல ராவணன் திரைப்படத்தை போய்ப்பாருங்க.

இதுதான் 'ராவணன்' கதை என்பது முன்னரே எல்லோருக்கும் தெரியும் என்பதால் திரைக்கதை மீதுதான் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது, மணிரத்தினம் கிட்டத்தட்ட அந்த எதிர்பார்ப்பை 90 வீதம் பூர்த்தி செய்துள்ளார் என்றுதான் சொல்வேன். அர்ஜுனன் இருக்க கர்ணனை ஹீரோவாக்கி வெற்றிகண்ட மணிரத்தினம் இந்தத்தடவை ராமன் இருக்க ராவணனை ஹீரோவாக்கி இதிலும் ஜெயித்துள்ளார் என்றே கூறுவேன்.

கதை,திரைக்கதை,வசனம் மற்றும் இயக்கம்.
விக்ரமின் தங்கை பிரியாமணியின் சாவிற்கு காரணமாக இருந்த போலிஸ்அதிகாரி பிரித்விராஜ்ஜின் மனைவியான ஐஸ்வர்யாராயை விக்ரம் கடத்துகிறார், கடத்திய இடத்தில் விக்ரமிற்கு ஐஸ்வர்யாராய் மீது தாபம் ஏற்படுகிறது. இறுதியாக பிரித்விராஜ் தன் மனைவியை மீட்கிறாரா? விக்ரம் ஐஸ்வர்யா மீது கொண்ட தாபம் என்னவாகிறது? என்பவற்றுக்கான விடையை வெள்ளித்திரையில் காணுங்கள்.
ஊருக்கே தெரிந்த கதை, அதை விக்ரம், ஐஸ்வர்யாராய், பிரித்திவிராஜ்,பிரபு என்னும் நான்கு முக்கிய காதாபாத்திரங்களால் இன்றைய காலத்திற்கேற்ப யாரும் இதுவரை அணுகாத வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் மணிரத்தினம். முதல்ப்பாதி நேரம்போனதே தெரியவில்லை, இரண்டாவதுபாதி முன்பாதியை போல வேகம் அதிகமில்லாவிட்டாலும் எந்த இடத்தலும் அலுப்பை தரவில்லை. மணிரத்தினம் இம்முறை ஆயுத எழுத்தில் விட்ட தவறை விடவில்லை, அதாவது திரைக்கதையில் 'இடியப்பம்' புளியாமல் பாமரனுக்கும் புரியக்கூடியவாறு திரைக்கதையை அமைத்துள்ளார்.
வசனங்கள் ஏனைய மணிரத்தினம் படங்களை போலல்லாது அதிகமாகவே பேசப்படுகின்றது. விக்ரம்,பிரபு பேசும் வசன உச்சரிப்பு வழமையான மணி படங்களில் இருந்து வேறுபட்டாலும் ரசிக்க வைக்கிறது. விக்ரமின் தம்பியாக வருபவர் இறந்தபின்னர் வரும் காட்சிகளிலும், அவர் இறந்தவுடன் இடம்பெறும் கலவரத்திலும் அழுத்தம் போதவிலையோ என்று எண்ணத்தோன்றுகிறது. இப்படி ஓரிரு இடங்களை தவிர்த்துப் பார்த்தால் தான்தான் இன்னமும் தமிழ்சினிமாவின் இயக்குனர்களுக்கு 'தளபதி' என்பதை மீண்டுமொருதடவை மணிரத்தினம் நிரூபித்துள்ளார் என்று அடித்துக் கூறலாம்.
நடிப்பு

விக்ரம் நடிப்பில் அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்துள்ளார். கோபம், அமைதி, சிரிப்பு, தவிப்பு, தாபம், வெறி, சோகம் என நடிப்பின் அத்தனை பரிமாணத்திலும் கலக்குகிறார். உடல்மொழி , வசன உச்சரிப்பு என்பவற்றில் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் விக்ரம் ராவணனிலும் விட்டு வைக்கவில்லை, அதிகமான ரிஸ்க் எடுக்கும் காட்சிகளிலும் சர்வசாதாரணமாக சாகசம் புரிந்திருக்கிறார். நடிப்பு , அக்ஷன், பாடல்கள் என ராவணனில் விக்ரம் தனது வேலையை நூறு சதவிகிதம் சிறப்பாக செய்துள்ளார் என்பதை விக்ரமை பிடிக்காதவர்களும் ஒத்துக்கொள்வார்கள்.
ஐஸ்வர்யாராய் அழகு பற்றி எழுதுவது சின்னப்புள்ளைத்தனமானது என்பதால் படத்தில் அவரது பங்கை பார்த்தால் விக்ரமிற்கு போட்டியாக நடிப்பிலும் விக்ரமைவிட அதிகமாக ரிஸ்க் காட்சிகளிலும் ஐஸ்வர்யாராய் சிறப்பாக நடித்துள்ளார். மணிரத்தினம் படங்களில் நடிப்பதாலோ என்னவோ தெரியவில்லை இன்றைய நடிகைகள் அனைவரையும்விட ஐஸ் அழகையும் தாண்டி சிறப்பானவாராக தெரிகிறார், பிரித்விராஜ்சுடன் 'கள்வரே' பாடலில் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது, காரணம் பொறாமையா? இல்லை ஐஸ் அபிசேக்பச்சனின் மனைவி என்பது படத்தையும் தாண்டி மனதில் பதிந்ததாலோ என்னவோ தெரியவில்லை.
பிரபு வெளுத்து வாங்கியிருக்கிறார், டைமிங் காமடியிலும் ஹீரோயிசத்திலும் தூள் கிளப்புகிறார், இப்படியான கதாபாத்திரங்களுக்கு இன்றைய ஒரே தெரிவு பிரபுதான். கார்த்திக்கிற்கு சொல்லிக்கொள்ளும் படியாக காட்சிகள் இல்லாவிட்டாலும் தன்னால் முடிந்தளவிற்கு பங்களித்திருக்கிறார்.பிரித்திவிராஜ் கதாபத்திரத்திற்கு வேறுயாரவது நடித்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.தனது நடிப்பில் சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும் படங்களினை இவர் ஞாபகப்படுத்துகிறார். அரவாணியாக வரும் வையாபுரி, விக்ரமின் தம்பியாக வருபவர் தவிர ஏனைய யாரும் மனதில் நிற்கவில்லை. இன்றைய தேதியில் ரஜினியை விட திரையரங்கில் அதிக கைதட்டு வாங்குமளவிற்கு செல்வாக்கான ஒரே ஒருவர் 'நித்தி' புகழ் ரஞ்சிதாதான், இவர் ஓரிரு காட்சிகளில் வந்தாலும் விசில் வானை பிளக்கிறது.
இசை, ஒளிப்பதிவு கலை மற்றும் எடிட்டிங்

ரகுமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே பிரபலமடைந்திருந்தாலும் 'கோடுபோட்டா' தவிர வேறெந்தப்பாடலும் படத்தில் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. ஆனாலும் அவை தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டிருக்கின்றன, பாடல்கள் போலவே ரகுமானின் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருக்கின்றது. இசைபோலவே எடிட்டிங்கில் சேகர் பிரசாத்தும் காட்சிகளை அருமையாக கோர்த்திருக்கிறார், திரைக்கதை வேகத்திற்கு இவருக்கு ஒரு ஒ.. போடலாம். தொங்குபாலமும், காட்டுக்குள் போடப்பட்ட குடில்களும் கலையின் உச்சக்கட்ட சிறப்பு, ஒன்றும் தேவையில்லை கலையை(Art) பற்றி ஒரேவார்த்தையில் சொல்வதேனால் "சார் தேசியவிருதுக்கு தயாராக இருங்க".
படத்தின் இன்னுமொரு நாயகன் இல்லையில்லை நாயகர்கள் சந்தோஸ்சிவனும் மணிகண்டனும், யார்யார் எந்தெந்த காட்சிகளை படமாக்கினார்கள் என்று தெரியவில்லை ஆனால் அத்தனை காட்சியளிலும் ஒளிப்பதிவு சூப்பரோ சூப்பர், அண்மைக் காலங்களில் இப்படி ஒரு ஒளிப்பதிவை எந்தத் தமிழ்ப்படத்திலும் பார்த்திருக்க முடியாது. குறிப்பாக ஐஸ்வர்யாராய் மலையிலிருந்து குதிக்கும் காட்சியை விபரிக்க வார்த்தைகளே இல்லை. ஒளிப்பதிவு பிரேமுக்கு பிரேம் அருமை,என்னவென்று சொல்வது? சொல்லப்போனால் ஒளிப்பதிவு நூற்றுக்கு நூற்றிப்பத்து வீதம் சிறப்பாக இருந்ததென்றே சொல்லாம்.

இப்படி எல்லாமே சிறப்பாக இருந்தால் குறைகளே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். படத்தில் சில குறைகள் இருக்கலாம், இருக்கலாமென்ன நிச்சயம் இருக்கும், ஆனால் அவற்றை கண்டு பிடிப்பதற்கு நான் இன்னும் குறைந்தது இரண்டு தடவையாவது படத்தை பார்க்கவேண்டும்.

மொத்தத்தில் ராவணன் - வசீகரம்

Comments

Popular posts from this blog

Navagraha Temples - Route Map (Powered by Google)

NetGear DGN1000 - MTU, Partial Loss of Internet Connection, and Performance

Layoffs Cut Deeper Into Economy....... As Recession Hits Most Industries, Corporate Giants Slash Jobs